மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை! ஒற்றுமையே பலம்! – விக்னேஸ்வரன்

16705 0

மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை. ஒற்றுமையே பலம் என்று உறுதிபட வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் இன்று தெரிவித்தார். 
கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெலி வைற்றிங், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் நிறைவில், ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவித்தார்.

தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைவது சிறந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தலைமை அவசியமென்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைக்கும் இடமில்லை என்றார்.

அதேவேளை, உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது, பதவியில் இருந்து விடை பெற்றுச் செல்வதனால், மரியாதையின் நிமித்தம் தன்னுடனான சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வடபகுதிக்கு வரும் போது, அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து வருவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டு செல்கின்றீர்கள் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாக கூறினார்.

காணாமல் போனோர்கள் தொடர்பான அலுவலகம் திறக்காமை மனவருத்தத்தினை தருகின்றது. அந்த அலுவலகம் செயற்பட்டால், மக்கள் தமது பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். அந்த வகையில், கனடா வாழ் மக்கள் தமது உதவிகளை செய்வதற்கு காத்திருக்கின்றார்கள். அவற்றினை எதிர்காலத்தில் சரியான முறையில் வடமாகாண மக்களுக்கு நடைமுறைப்படுத்துவோம் என்றும் உயர் ஸ்தானிகள் உறுதியளித்துள்ளாதாக முதலமைச்சர் கூறினார்.

Leave a comment