வேலூர் மத்திய சிறையில் நளினி உண்ணாவிரதம் வாபஸ்

3238 0

புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நளினி அதனை வாபஸ் பெற்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், பெண்கள் சிறையில் முருகனின் மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி, தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறைத்துறை தலைவருக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் நளினி மனு அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பெண்கள் சிறை கண்காணிப்பாளரும், பெண்கள் சிறையின் சில அலுவலர்களும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதால் தன்னை உடனடியாக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவரிடம் சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் சண்முகசுந்தரம், ராஜலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் நளினியிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நளினி உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றார். பின்னர் அவர் உணவு சாப்பிட்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment