ஆட்சியில் பங்கு இல்லை என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து திமுக இறங்கி வராததால், கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் தனது நிலைப்பாட்டை மாற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரசுக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டுமென முதன்முதலில் குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கட்சி மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஷ் சோடங்கர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் ஆட்சியில் பங்கு குறித்து பேசியபோதுகூட, இதை நான்தான் முதலில் வலியுறுத்தினேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
ஒரு மாதத்துக்கு முன்புகூட தமிழகத்தில் எந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும், ‘ஆந்திரா மடல்’ போன்று அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். தற்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு தர வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜோதிமணி எம்.பி.யும் அதற்கு வலுசேர்க்கும் வகையில் தனது கருத்தை பதிவு செய்தார்.
அதன் பின்பு ஜோதிமணி அமைதியானாலும், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தொடர்ந்து தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. இதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏ தளபதி போன்றோர் எதிர்வினையாற்றினர். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு சரிவராது’ என்றார். ஆனாலும், மாணிக்கம் தாகூர் போன்றோர் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
ஆட்சியில் பங்கு கோரிக்கையால், கூட்டணியே முறிந்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் திமுக கூட்டணியிலேயே தொடர்வதுதான் நல்லது என கூறத் தொடங்கினர்.
இந்நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் சமீபத்தில் கேட்டபோது, தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார். அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறினாலும், மாணிக்கம் தாகூர் பேசி வருவதை தவறோ, சரியோ என்று கூறாமல் தவிர்த்தார்.
திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வராததால் கூட்டணிக்கே ஆபத்து வந்துவிடும் என்று கருதிய கார்த்தி சிதம்பரம் ஆட்சியில் பங்கு கோஷத்தை கைவிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம், தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் பங்கு குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பதன் மூலம், அக்கோரிக்கையை அவர் முழுமையாக கைவிடவில்லை என்று காங்கிரஸின் மற்றொரு தரப்பினர் கூறுகின்றன.

