கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிரான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாதது ஏன்? ; அஜித் பி. ரேரா கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நீதி அமைச்சர்; சபையில் கடும் வாக்குவாதம்

9 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர் அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் கல்லறை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக, தொடுக்கப்பட்ட வழக்கு, அவர் ஜனாதிபதியானதும் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

தற்போது அந்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய முடியுமாகி இருக்கின்றபோதும் ஏன் அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிரான குறித்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாமல் இருக்கிறது என அஜித் பி ரேரா,  வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல  விடைக்கான மேலதிக வினாவின் போது கேட்ட கேள்விக்கு நீதி அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால், சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அஜித் பிரேரா  தனது மேலதிக கேள்வியின்போது, 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில், அரச நிதியில் தனது தாயின் கல்லறை அமைத்தார் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், பிரதிவாதி நோய்வாய்ப்பட்டு வெளிநாடு சென்றார். சில காலம் சென்றபின்னர் மீண்டும் நாட்டுக்கு வந்தார். அதன் பின்னர் நாட்டின் ஜனாதிபதியானார்.

அவர் ஜனாதிபதியான  மறுதினமே, ஜனாதிபதிக்கு உரிய சிறப்புரிமைக்கமைய அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அந்த சிறுப்புரிமை இல்லை. அதனால் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், பாதியளவு முடிவுக்கு வந்த நிலையில் வாபஸ்பெறப்பட்ட அந்த வழக்கை அரசாங்கம் மீண்டும் ஏன் ஆரம்பிக்காமல் இருக்கிறது.?

அதனால் அரச பணத்தை  மோசடி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த இந்த வழக்கை மீண்டும்,  ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார்.

அதற்கு நீதி அமைச்சர்  பதிலளிக்கையில், இந்த கேள்வி  பிரதான கேள்வியுடன் தொடர்புபடாததால், இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

அதற்கு அஜித் பி ரேரா எம்.பி. அப்படியானால் இவர்கள் தங்களுக்கு தேவையான வழக்குகளை தெரிவு செய்தே வழக்கு தொடுக்கின்றார்கள். அத்துடன் அரச நிதி மோசடி செய்த தனவந்தர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து அவ்வாறானவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதாகவும் வாபஸ் பெறப்பட்ட இவ்வாறான 42 வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வதாக  ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன் அவர்களுக்கு  அரசாங்கம் பயமா? அல்லது அவர்களுடன் ஏதாவது டீல் இருக்கிறதா என கேட்கிறேன் என்றார்.

அதற்கு நீதி  அமைச்சர் பதிலளிக்கையில், பிரதான கேள்விக்கு ஏற்புடைய மேலதிக கேள்விகளுக்கு பதலளிக்க தயார். ஆனால் சம்பந்தமில்லாத கேள்விக்கு பதிலளிக்க நான் கடமைப்படவில்லை. அதேநேரம் கோட்டாபய ராஜபக்ஷ் அதிகாரத்தில் இருக்கும்போது கட்டிலுக்கு கீழ் ஒழிந்திருந்தவர்கள் தற்போது வீரர்கள்போல் கதைக்கின்றனர் என்றார்.

இதன்போது  பிரதான எதிர்க்கட்சிக்கும் ஆளும் தரப்புக்குமிடையில் சபையில் கடுமு வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சபையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து சபை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.