ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

253 0

கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (17) கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் இருபது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் கடந்த நான்கு வருடங்களாக முழுநேர மற்றும் பகுதி நேர ஊடக தொழில் ஈடுப்பட்டு வருகின்ற ஊடகவியலாளர்களை உள்ளடக்கி செயற்பட்டு கிளிநொச்சி ஊடக அமையம் தனது செயற்பாடுகளின் வரிசையில் இதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்பயிற்சிகள் துறைசார் வல்லுநர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் பயிற்சிக்கு தனியே ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி ஊடகவியலை ஒரு பாடமாக கற்றுவரும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்வது பற்றியும் உரிய தரப்பினர்களுடன் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்துறை, ஊடகத்துறை, புகைப்படத்துறை உள்ளிட்ட பல துறைகளில் சிறப்புத் தேர்ச்சி மிக்கவர்கள் மூலம் பயிற்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.