லண்டன் கிளப்பில் ஆசிட் தாக்குதல்: 12 பேர் காயம்

267 0

லண்டனில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.

லண்டனில் கடந்த சில ஆண்டுகளால் ஆசிட் வீச்சு, அரிக்கும் ஒருவகை திரவத்தை வீசி தாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2010ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையில் 1800 ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 454 சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், கிழக்கு லண்டனில் உள்ள மாங்லே கிளப்பில் இன்று அதிகாலையில் வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அரிக்கும் தன்மைகொண்ட ஒருவித திரவத்தை பார்வையாளர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உடலை அரிக்கும் திரவம் பட்டதால் காயமடைந்த 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய நபர்களைத் தேடி வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், கிளப்பை சுற்றியுள்ள தெருவிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.