முசலிப் பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் கொழும்பில் ஒன்றுகூடல்

216 0

முசலிப் பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று (05) மாலை கொழும்பில் ஒன்றுகூடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை மன்றம், பல தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தேசிய ஷுரா சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரின் பங்கேற்புடன் இந்த ஆலோசனை மன்றத்தில் துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் தேசிய ரீதியில் செயற்படும் முஸ்லிம் சிவில், சமூக அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

வடமாகாண முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றம் முதல் புதிய வர்த்தமானி அறிவித்தல் வரையான காலப்பகுதியில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தொகுப்பினை பேராசியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் முன்வைக்கவுள்ளதுடன், சட்டவரையறைக்குள் இந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்கொள்ள முடியுமான உத்திகள் பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விளக்கவுள்ளார்.

தேசிய ஷுரா சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உப குழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இந்த தொடர்ச்சியான அமர்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.

இந்த அமர்வில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் கூட்டாக இணைந்து பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தேசிய ஷுரா சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.