பொகவந்தலாவ நகரில் கைதுசெய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொகவந்தலாவ நகருக்கு நேற்று (24) சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கைதுசெய்யப்பட்ட இளைஞர் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைத்த அமைச்சர், இவ்விடயத்தில் சில பொலிஸ் அதிகாரிகள் தமது அதிகார எல்லையை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, இளைஞரை கைதுசெய்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரித்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சட்டம், ஒழுங்கினை நிலைநாட்டுவதே பொலிஸாரின் பொறுப்பாகும்; மாறாக, சட்டத்தை கையில் எடுத்து செயற்படுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அமைச்சர் இடித்துரைத்தார்.
இளைஞர் கைதான சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
பொகவந்தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கும் வங்கி முகாமையாளருக்கும் இடையில் வியாழக்கிழமை (22) பிற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி முகாமையாளரின் அறிவிப்பையடுத்து பொகவந்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்துக்கு சென்று வாடிக்கையாளரான இளைஞரை கைதுசெய்ய முற்பட்டபோது அங்கு கூடியிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொலிஸார் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை செவ்வாய்க்கிழமை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


