மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியவர்கள் தான் தற்போது ஜனநாயகம்,மக்களின் வாக்குரிமை தொடர்பில் குரல் எழுப்புகிறார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை (20) கம்பஹா மாவட்ட செயலாளர் பிரிவில் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாடு என்ற ரீதியில் மிக மோசமான பொருளாதார எதிர்கொண்டுள்ளோம்.நலன்புரி சேவைகள்,எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி மற்றும் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு நிதி ஒதுக்குவது பெரும் போராட்டமாக உள்ளதை நிதியமைச்சின் செயலாளர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை முடக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.நிதி நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது.உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலுயுத்துகிறார்கள்.தேர்தலுக்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியவர்கள் தற்போது ஜனநாயகம்,தேர்தல் உரிமை தொடர்பில் குரல் எழுப்புகிறார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது,அரசியலில்ல வெற்றி,தோல்வி ஆகியவற்றை அரசியல்வாதிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சிமன்ற சபை தேர்தலை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.மாகாண சபை தேர்தல் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்.அரசியல் நோக்கத்திற்காகவே நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு சுதந்திர மக்கள் முன்னணி பாரிய சவால் அல்ல உள்ளூராட்சிமன்ற சபை தேர்தலில் சுதந்திர மக்கள் முன்னணி எவ்வாறு மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சுதந்திர மக்கள் முன்னணிக்குள் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது என்றார்.

