இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு பங்களாதேஸ் வங்கி இலங்கைக்கு மேலும் ஆறுமாதகால அவகாசம் வழங்கியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டே பங்களாதேஸ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
இலங்கை கடனை திருப்பி செலுத்தவேண்டிய காலத்தை நீடிப்பதற்கு பங்களாதேஸ் வங்கியின் இயக்குநர் சபை இணங்கியுள்ளது என மத்திய வங்கியின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்நியசெலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இலங்கை 2021மே மாதம் 200 மில்லியன் டொலரை கொள்வனவு செய்திருந்தது.
இலங்கை இந்த கடனை கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் திருப்பி செலுத்தவேண்டும் எனினும் அது சாத்தியமாகவில்லை.
கடந்த வருட ஏப்பிரலில் இலங்கைதனது சர்வதேச கடன்களை செலுத்துவதை நிறுத்தி வங்குரோத்து நிலைக்கு சென்றது.
இருநாடுகள் மத்தியிலான உடன்படிக்கையின் படி இலங்கை இந்த வருடம் மார்ச்மாதம் இந்த கடனை திருப்பி செலுத்தவேண்டும்.
எனினும் இலங்கை தொடர்ந்தும் அந்நிய செலாவணிநெருக்கடியை எதிர்கொள்வதால் பங்களாதேஸ் வங்கி கடனை திருப்பிசெலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிக்க இணங்கியுள்ளது.
தனது அந்நியசெலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்துவரும் நிலையிலேயே பங்களாதேஸ் வங்கி இலங்கை கடனை திருப்பிசெலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிக்க இணங்கியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை செப்டம்பரிற்குள் இந்த கடனை திருப்பி செலுத்தவேண்டும்.

