புத்தளம் மதுரங்குளி பகுதியிலிருந்து முல்லைத்தீவு கோகிலாறு பகுதிக்கு பெற்றோலைக் கொண்டு செல்ல முற்பட்ட கெப்ரக வண்டியை புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
இன்று (16) பிற்பகல் இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி கெப்ரக வண்டியில் பெற்றோலைக் கொண்டு செல்வதாக பொலிஸ் விஷேடப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்குத் தகவலை வழங்கியதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது 2 பெரல்களில் 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாகவும் கெப்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த பெற்றோல் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவந்திருக்கலாமென பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

