துபாயில் தொழில் புரிந்த நிலையில் ஒரு மாத கால விடுமுறையில் இலங்கை திரும்பி தனது வீட்டில் பொழுதைக் கழித்தவர் வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி, பிரதேசத்தைச் சேர்ந்த தவராசா தற்பரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை 17 பிற்பகல் அவரது மனைவி சுகந்தினியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இவர், செவ்வாய்க்கிழமை ஆயித்தியமலை, ஆறாம்கட்டையிலுள்ள தனது வயலுக்குச் சென்றுவிட்டு அன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வவுணதீவு வீதியினூடாக தனது வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டுள்ளார்.
அவ்வேளையில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் சடுதியாகத் திரும்பியதால் அதில் மோதுண்டு பின்னர் வீதி மருங்கிலிருந்த கொங்கிறீட் கட்டு ஒன்றுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.
மரணித்தவர் கடந்த மாதம் 19ஆம் திகதியே துபாயிலிருந்து ஒரு மாத விடுமுறையில் நாடு திரும்பியிருந்தார் என்றும் அவர் மீண்டும் திங்கட்கிழமை துபாய் செல்லவிருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆயித்தியமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

