விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம்-முள்ளிவாய்க்காலுடன் மரணித்துவிட்டது!

301 0

aasdதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்தஒழுக்கம் முள்ளிவாய்காலுடன் மரணித்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இனத்தின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டுமானால், அந்த இனத்தின் கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாக்க ஆலயங்களும் அதனூடான சமூகங்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடுக்காமுனை காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வியுடன் ஒழுக்கம் கட்டாயம் மாணவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களில் மதுபான பாவனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கலாசார சீர்கேடுகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோ நிலை அதிகரித்துள்ளமை கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

ஊடகங்களில் தினமும் வரும் செய்திகள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் வன்முறை, வாள்வெட்டு என சமூக சீர்கேடுகள் அன்றாடம் சர்வ சாதரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீய விளைவுகளில் இருந்து மக்களை மீட்க ஆலயங்கள், கலாசார நிகழ்வுகள் மூலமாக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2009 மே மாதம் பிற்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் இடம்பெறவில்லை என்றும் ஆனால் தமிழ் மக்களுடைய நிலமும் வளமும் மாற்று இனத்தவர்களால் சத்தமில்லாமல் சூறையாடப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றம் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர்,

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் எல்லைக் கிராமம் கெவிளியாமடுவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொண்டபோது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அதனை தான் தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே தாந்தாமலை முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை அமைக்க இராணுவம் முயன்றபோது, நேரடியாக சென்று அதனை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டு. நகர் மாநக எல்லையில் பிள்ளையாரடி பிரதான வீதியில் பௌத்த பிக்கு ஒருவர், புத்தபெருமானின் சிலையை நிறுவ முயன்றவேளை, அங்கு சென்று அதனை தடுத்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மகிந்த அரசின் இக்கட்டான காலங்களில், கெடுபிடி உயிர் அச்சுறுத்தல்களை முகம்கொடுத்து அரசியல் செய்த போதும் தமக்காக ஒதுக்கப்பட்ட பன்முக நிதி மூலமாக நான் கடந்த பதினொரு வருடங்கள் ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளவில் கல்வி செயல்பாடுகளுக்கு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.