மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது!

1019 0

சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது. முன்னாள் ஆட்சியாளர், இனப்படுகொலையாளர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குச் செய்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை புதிய நல்லாட்சி வழங்கும் என தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்டபோதும் அக் குற்றவாளிகளுக்கான எந்தவித விசாரணைகளும் நடத்தப்படாமல், தண்டனைகளும் வழங்கப்படாமல் இந்த நல்லாட்சி அரசிலே அவர்கள் மிகவும் பாதுகாப்பாக, சுதந்திரமாகப் பதவிகளைப்பெற்று, சொகுசு வாழ்க்கையினை நடத்திக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

வழமைபோல சிங்கள ஆட்சியாளர்கள் செயற்படும் விதமாக மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்திட்டத்தையே முன்னெடுத்துள்ளார். இவ்விடயம் அரசு தனது நிகழ்ச்சிநிரலை இன்னும் மாற்றவில்லை என்பதுடன் தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் நன்கு திட்டமிட்டே செயற்படுகின்றனர் என்பதும் தெளிவாகின்றது.

இன்றுரை தமிழர் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரியவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படவில்லை என்பது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

சிங்களப்பேரினவாத அரசு சர்வதேச விசாரணையை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் உள்ளக விசாரணையை நடாத்தும் நோக்கில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. சர்வதேச நாடுகளையும் ஏமாற்றும் நாடகத்தை கச்சிதமாக நல்லாட்சியும் செய்து வருவதுடன், தமிழர் தரப்பிற்குள் சூழ்ச்சிகளைச் செய்து திட்டமிட்டு ஒற்றுமையைக் குழப்பும் நடவடிக்கைகளையும் மறைமுகமாக மேற்கொள்கிறது.

எனவே தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் அணிதிரள முன்வரவேண்டும். பகைமைகளை மறந்து தமிழர் நலனுக்காக அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்பதே எனது கருத்தாகும் என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment