ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

236 0

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினர், நேற்று திருகோணமலையில் கூடி கலந்துரையாடினர்.

பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கடந்த மாதத்தில் இருந்து நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளான கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தமிழ் மக்கள் பேரவையினரும் தமது ஆதரவினை தெரிவிக்க தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின், போராட்டத்திற்கும், நில மீட்பு போராட்டத்திற்கும் தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.