வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தன் அவர்கள் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

330 0

சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையானது தமிழர்களின் உயிர்த்தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலன்ட் நாளிதல் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இரு தரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்சொன்ன அத்தனையும் இலங்கையில் நிலவிவந்த பயங்கரவாதத்தின் விளைவுகளாகவே சிங்கள தேசத்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறியதன் மூலம் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது மிகச்சரியே என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.

இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களை அழித்துவிட்டு அதை வெற்றியாக கொண்டாடிய மனித மிருகம் ராசபக்சே தலைமையிலான சிங்கள அரசிற்கே பாராளுமன்றத்தில் பாராட்டுப் பத்திரம் வாசித்த அயோக்கிய சிகாமணிதானே இந்த சம்பந்தன்.

தன் இனம் சார்ந்த, மொழி சார்ந்த அழித்தொழிக்கப்பட்டவர்கள் போக மீதமிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாது அத்தனை அழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணமாகத் திகழும் சிங்கள பௌத்த பேரினவாத பேயரசிற்கு ஆதரவாக செயற்படுவது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும்.

அழகிய இலங்கைத் தீவு இரத்த பூமியாக சிவந்து கொண்டிருப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் அடிச்சுவட்டில் இயங்கிவரும் அரச பயங்கரவாதமே முழுக்க முழுக்க காரணமாக இருக்கும் போது பயங்கரவாதத்தின் பெயரால் அதற்கு வெள்ளையடிக்க முயற்சிப்பது அயோக்கியத்தனமின்றி வேறென்ன…?

சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சியில் தமிழர் உயிர் பறிக்கப்பட்டும், தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும் வந்த நிலையில் வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தனின் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சுதந்திர தமிழீழத்தை தவிர வேறு பேச்சிற்கே இடமில்லை என்ற உறுதியோடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான ஏது நிலையை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்தத் துரோகி சம்பந்தன் தான்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் என்ற பலவீனமான நிலைப்பாட்டை ஏற்றமைதானே தனிநாட்டுக் கோரிக்கையோடு உறுதியுடன் நின்ற புலிகளை அழிக்க காரணமாகியது. கொள்கைப்பிடிப்போடு இருக்கும் புலிகளை அழித்துவிட்டால் மிதவாத தலைமையான சம்பந்தனை முன்னிறுத்தி இலங்கை அரசியலை தம்போக்கில் கொண்டு செல்லலாம் என்ற முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை இட்டுச்சென்றது சம்பந்தனின் அடிபணிவு அரசியல்தான்.

தமிழ் மக்களுக்கும் தமிழர் தேசத்திற்கும் காவலாகத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நிர்மூலமாக்கியதுடன் எழுபதாயிரம் பேர் கொல்லப்பட்டும், 146,769 தமிழர்களை அந்தராத்மாக்களாக்கப்பட்டமைக்கும், நடந்துவரும் இனவழிப்பிற்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்து வருவதற்கும், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கும் சம்பந்தனின் அடிபணிவு அரசியலே காரணமாகும்.

தமிழினத்தின் சாபக் கேடாக இரு பெரும் துரோகிகள் உயிரோடிருந்து கழுத்தறுத்து வருகிறார்கள். எட்டுக்கோடி தமிழர்களின் உணர்வுகளை மடைமாற்றி தன் குடும்ப ஊழலை முன்னிறுத்திய சுயநல அரசியலால் சோனியா தலைமையிலான இந்திய அரசின் சகல இனவழிப்பு முன்னெடுப்புகளையும் தாராளமாக மேற்கொள்ள வழியேற்படுத்தியதன் மூலம் தமிழினத் துரோகியாக வரலாறு உள்ளவரை வாழ்வாங்கு வாழும் மு.கருணாநிதி முதலாவது சாபக்கேடாகும். அடுத்த சாபக்கேடு யாரென்ற கேள்விக்கே இடமின்றி அந்த இடத்தை இட்டுநிரப்பிக் கொண்டிருப்பவர் சம்பந்தன்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

இரா.மயூதரன்.
(17/04/2017)