கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டரை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நேற்று மீளவும் உத்தரவிட்டார்.
அத்துடன் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், கடற்படை தலைமையகத்தில் தேடுதல் நடத்தி அவரைக் கைது செய்யுமாறும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று மீள விசாரணைக்கு வந்த போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் கடற்படை தளபதியின் உதவியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக இணையம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட தகவலை பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான அச்சலா செனவிரத்ன மன்றில் முன்வைத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளாரா என்பது தொடர்பில் பிரத்தியேகமாக தகவல்களைப் பெற்று விசாரணை செய்யுமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்தார்.
வசந்த கரண்ணாகொட
முன்னாள் கடற்படை தளபதி, வசந்த கரண்ணாகொட தனது பாதுகப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்ததிருந்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்னவின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேர்டை கட்டுப்பாட்டில் புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இந்த ஐவரின் கடத்தல்களுடன் லக்ஷ்மன் உதய குமார என்ற கடற்படை சிப்பாய் நேரடியாக பங்கேற்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது.
கடற்படை புலனாய்வாலர்களில் ஒருவரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆராச்சி என்பவருடன் சேர்ந்து அவரது அணியில் ஒருவராக இருந்து உதயகுமார இக்கடத்தல்களை செய்ததாக புலனயவுப் பிரிவு கூறுகிறது.
இந் நிலையில் கடற்படை வீரர் லக்ஷ்மன் உதயகுமார மூன்றாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த கனகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டர் ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள ரணசிங்க என்பவரையும் குற்றப் புலனயவுப் பிரிவினார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந் நிலையில் அவர்கள் இருவரும் நேற்று சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் முதலாவது சந்தேக நபரான பிணையில் உள்ள லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க மன்றில் ஆஜரானார்.
விசாரணைகள் ஆரம்பமான போது, ஏற்கனவே 2ஆம் 3ஆம் சந்தேக நபர்களான ரணசிங்க, லக்ஷ்மன் உதய குமார சார்பில் கோரப்பட்டிருந்த பிணை கோரிக்கை மீதான தீர்ப்பினை நீதிவான் அறிவித்தார்.
‘ சந்தேக நபர்கள் தம்மீது தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினை சவாலுக்கு உட்படுத்தி பிணைக் கோரியுள்ளனர்.
கடத்தப்பட்ட 11 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஆதாரம் இன்றி தமக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்த முடியாது என சந்தேக நபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களின் உடலங்கள் கூட கிடைக்காத நிலையில் அக்குற்றச்சாட்டினை சுமத்த முடியாது என அவர்கள் தமது பிணைக் கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் பிணை வழங்க சட்ட மா அதிபர் சார்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாம் சந்தேக நபரே காணாமல் போனோரைக் கடத்தியமைக்கும், 2 ஆவது சந்தேக நபரின் கீழ் அவர்கள் கன்சைட் நிலத்தடி முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தமைக்கும் ஆதாரம் உள்ளது.
எனினும் 2009 மார்ச் மாதத்துக்கு பின்னர் அங்கு தடுப்பில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என சாட்சியங்கள் இல்லை.
இந் நிலையில் 1988 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக திருத்தப்பட்ட சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 108 ஆவது அத்தியாயத்துக்கு அமைய கடத்தப்பட்டு சட்டவிரோத தடுப்பில் உள்ள நபர்கள் தொடர்பில் தகவல் இல்லாது போயின் அவர்கள் உயிருடன் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும் என கூறப்பட்டுள்ளதாக கூறி சட்ட மா அதிபர் சார்பில் கொலை குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை விட கொலை வழக்கொன்றில் குற்றம் சாட்டி கொலை செய்யப்பட்டவர்களின் சடலம் அல்லது கொலைக்கான காரணம் கண்டறியப்பட்டிருத்தல் கண்டிப்பான அவசியமற்றது. சடலம் இல்லாமலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்த முடியும்.
இந்தியாவின் பிரபல வழக்குத் தீர்ப்புகள் இரண்டு இதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கை நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனால் தண்டனை சட்டக் கோவையில் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையானது சரியானதே என நான் தீர்மனிக்கின்றேன்.
அதன்படி பிணை சட்டத்தின் 13 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பின் பிணை வழங்கும் அதிகாரம் இந்த மன்றுக்கு இல்லை.
அதே போன்று குற்றச்சாட்டுக்களில் மற்றொரு குற்றச்சாட்டு துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 44 ஆவது அத்தியாயத்தின் கீழும் உள்ளது. அது தொடர்பிலும் பிணை வழங்கும் அதிகாரம் இம்மன்றுக்கு இல்லை. எனவே இருவரின் பிணை கோரிக்கைகளையும் நிராகரிக்கின்றேன். என நீதிவான் லங்கா ஜயரத்ன அறிவித்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபரான லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆராச்சி தொடர்பிலான விவகாரம் விவாதிக்கப்பட்டது. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என நீதிவான் சி.ஐ.டி. யிடம் கேள்வி எழுப்பினார்.
சி.ஐ.டி. சார்பில் நேற்று மன்றில் ஆஜராகியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபால, மேலதிக அறிக்கை ஊடாகவும் வாய் மொழி ஊடாகவும் இதற்கு பதிலளித்தார்.
‘ கனம் நீதிவான் அவர்களே, அவரைக் கைது செய்ய நாம் முயற்சிகளை எடுத்தோம். அவரைத் தேடி அவர் வீட்டுக்கு சென்றோம். அவர் அங்கு இல்லை.
அவரது மனைவியிடம் இது தொடர்பில் விசாரணை செய்தோம். இதன் போது அவர் கடற்படை தலைமையகத்தில் இருப்பதாகவும் அவர் கடமையில் இருப்பதால் மூன்று முறை தான் கடற்படை தலைமையகம் சென்று அவரை சந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடற்படை தலைமையகத்திலேயே அவர் இருப்பதாக தகவல் உள்ளது. எனவே அந்த தகவலுக்கு அமைய அவரைக் கைது செய்ய கடற்படை தளபதி, பாதுகாப்பு செயளாலர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிவான் ஏன் அங்கு சென்று அவரைக் கைது செய்யாவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு கடற்படை முகாமுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என சி.ஐ.டி. அதிகாரி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மன்றில் ஆஜராகி இருந்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, ஏன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேக நபரைக் கைது செய்ய முகாமுக்குள் செல்ல முடியாதா என வினவினார்.
இதனையடுத்து, ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான், கடற்படை தலைமையகத்தில் அவர் இருப்பதாக தகவல் இருப்பின் உடனடியாக கடற்படை தலைமையகத்தில் தேடுதல் நடத்தி அவரைக் கைது செய்யுமாறும்.
அங்கு செல்லும் போது அனுமதி தொடர்பில் சிக்கல் ஏற்படின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஊடாக அது தொடர்பில் கலந்தாலோசனை செய்யுமாறும் கூறினார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன இணையமொன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி,கடற்படை தளபதியின் உதவியுடன் ஹெட்டி ஆராச்சி நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து அது தொடர்பில் சட்டத்தரணியிடம் தகவல் இருப்பின் அதனைப் பெற்று உடனடியாக பிரத்தியேகமாக விசாரணை செய்யுமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.