எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

407 0

பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.(23-03-2017)

இவர் 1931 செப்., 22ம் தேதி தெலுங்கானாவின் செகந்திராபத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் தியாகராஜன். தந்தையின் மறைவுக்குப் பின் 1952ல் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ஜெமினி ஸ்டுடியோவில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதே எழுதத் தொடங்கினார். இருப்பினும் 1966ல் தான் முழுமையான எழுத்தாளராக ‘அசோகமித்திரன்’ என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தார். 1980களில் பல்வேறு கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதையே முழுமையான பணியாக இந்தியா முழுவதும் மேற்கொண்டார்.

1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். ‘அசோகமித்திரன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், நாவல் கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். சில பத்திரிகைகளிலும் எழுதினார். இவரது கதை எழுதும் பாணி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சி வசப்பட்ட நடையைத் தவிர்த்து சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதும் வழக்கம் கொண்டவர். இதனால் வாசகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருந்தது. 1996ல் ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது செகந்திராபாத்தை கதைக்களமாக கொண்டிருக்கும்.

200 சிறுகதைகள்
‘கணையாழி’ என்ற இதழில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். தவிர 8 நாவல்கள், நுாற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என எழுத்துலகில் தனி முத்திரை படைத்தவர்.

போர்டீன் இயர்ஸ் வித் பாஸ்’, ‘தி கோஸ்ட் ஆப் மீனம்பாக்கம்’, ‘ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்’ உள்ளிட்ட இவரது ஆங்கில நுால்கள் மிகவும் பிரபலம். ஆங்கில நாளிதழ்களிலும் எழுதியுள்ளார். ‘நாடகத்தின் முடிவு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘பிரயாணம்’, ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘மானசரோவர்’, ‘ஒற்றன்’, ‘ஆகாசத் தாமரை’, ‘விடுதலை’ உள்ளிட்டவை இவரது படைப்புகளில் முக்கியமானவை.

விருதுகள்

1977 மற்றும் 1984ல் தமிழக அரசின் ‘இலக்கிய சிந்தனை’ விருது, 1992ல் ‘லில்லி நினைவு’ பரிசு, 1996ல் அக்சரா விருது, 1996ல் சாகித்ய அகாடமி விருது, 2007ல் எம்.ஜி.ஆர்., விருது, 2012ல் என்.டி.ஆர் தேசிய நுாலக விருது, 2013ல் ‘க.நா.சு’ விருது, 2013ல் பாரதிய பாஷா பரிசத் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர்.

கமல் இரங்கல்

அசோகமித்திரன் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். டுவீட்டரில் , கூறியதாவது, எழுத்தாளர் அசோகமித்திரன் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும் என தெரிவித்துள்ளார்.