போரில் 25,363 படையினர் பலி! – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல்

266 0

இலங்கையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போரில், 25 ஆயிரத்து 363 படையினர் பலியாகியுள்ளனர் என்றும், 38 ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 1972- 2009 காலப் பகுதியில் பயங்கரவாத செயற்பாடு காரணமாக மரணமடைந்த மற்றும் காயமடைந்த முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் எண்ணிக்கையினை வேறு வேறாக சமர்ப்பிக்குமாறு ஒருங்கிணைந்த எதிர்க் கட்சி உறுப்பினரான உதயகம்மன்பில பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது, சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லாத காரணத்தினால் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக, குறித்த காலப்பகுதியில் 23 ஆயிரத்து 661 இராணுவத்தினர் மரணமடைந்துள்ளதுடன், 37ஆயிரத்து 957 காயமடைந்துள்ளனர். கடற்படையில் 714 பேர் மரணமடைந்துள்ளதுடன் 472 பேர் காயமடைந்துள்ளனர். விமானப்படையில் 443 பேர் மரணமடைந்துள்ளதுடன் 234 பேர் காயமடைந்துள்ளனர்.

சிவில் பாதுகாப்பு படையில் 545 பேர் மரணமடைந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளளர். போரின் போது காயமடைந்தவர்களது சரியான தகவல்கள் கணக்கெடுக்கப்படவில்லை. சேவையில் இருக்கும் போது பல தடவைகள் வெவ்வேறு முறையில் இவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும், போரின் போது மரணமடைந்த மற்றும் காயமடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை சம்பந்தமான கேள்விக்கு பதில் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.