2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் முக்கியமானவையே- அல் ஹ_சேன்(காணொளி)

328 0

 

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் முக்கியமானவையே என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன் இலங்கை தொடர்பான அறிக்கையை நேற்று அதிகாரபூர்வமாக முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், தமது கருத்துக்களை வெளியிட்டன. முடிவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதிலுரை இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன்,

‘இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது முன்னுரிமை அளிக்கத் தேவையற்றது என்று இல்லை. எல்லாப் பரிந்துரைகளுமே முக்கியமானவை.

இலங்கை அரசு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை களையும் வகையில், இலங்கை அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்பட முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நம்புகிறது.

கடந்தகாலத்தை விட வேறுபட்டதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அடிப்படை ஒழுங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று நம்பும் வரையில், நிலையான அமைதியை ஏற்படுத்துவது கடினம்.

இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மீண்டும் நினைவுபடுத்துவதுடன், இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்கும் என்பதுடன், கண்காணிப்பையும் மேற்கொள்ளும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.