பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே போட்டி நடக்கிறது: மதுசூதனன் பேட்டி

239 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் இன்று காலை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். கண்டெடுத்த இரட்டை இலை சின்னம் சில சூழ்நிலைகளால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து மீட்டெடுப்போம்.எம்.ஜி.ஆரின் உண்மையான பக்தர்கள், அம்மாவின் உண்மை விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்போம். ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா அணியினர் பணத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் பாசத்துடன் நம்மோடு இருக்கிறார்கள். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது.
சசிகலாவின் படத்தைப் போட்டு ஓட்டு கேட்பதற்கு கூட எதிர் அணியினர் தயங்குகிறார்கள். தோற்று விடுவோமோ என்ற பயத்தில் அவர்கள் திறந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கூட சசிகலா படத்தை வைக்கவில்லை.

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இந்த நேரத்தில் அணி திரள வேண்டும். சசிகலா குடும்பத்தினரின் பிடியில் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும்.
சசிகலா குடும்பத்தினர் இல்லாத அ.தி.மு.க.வை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு ஓ.பி.எஸ். தலைமையில் தான் அணி வகுக்க வேண்டும்.ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் ஆட்சியையும் நாம் அகற்ற வேண்டும். 21 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் நான் அம்மா ஆசியோடு வெற்றி பெறுவேன்.

அம்மா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். ஓ.பி.எஸ். ஒருவரால்தான் அது முடியும். நிச்சயம் அதை அவர் செய்வார்.எங்கள் அணியின் புதிய பெயர், சின்னம் பற்றி விரைவில் தெரியவரும்.இவ்வாறு மதுசூதனன் கூறினார்.