வவுனியா இறம்பைக்குளம் பாடசாலைக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு

267 0
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கான (தேசிய பாடசாலை) குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால்  மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் சீறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அமைச்சரினால் இதுவரை எட்டு பாடசாலைகளுக்கு இவ்வாறான குடிநீர் வடிகட்டும் இயந்தித்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் கனடா கிளையின் நிதியுதவியுடன் இந்த குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. ரூபா 3 இலட்சத்து ஐம்பதினாயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தொகுதியலிருந்து நாளொன்றுக்கு இரண்டாயிரம் லீற்றர்; வடிகட்டிய குடிநீரை பெற்றுக்கொள்ளமுடியும்.
இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் திரு.சி.வில்வராசா, ஏ.ஜே.எஸ் நிர்மாணிகள் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அகிலன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.