தமிழர் மரபுரிமை அழிக்கப்படுதலை எடுத்துரைக்கும் “இருளில் இதயபூமி” ஆவணப்படம் .- ஐநா வில் பக்கவறை நிகழ்வில் ஒளிபரப்பு

429 0

எமது தாயகத்தில் வளங்கள் சின்னாபின்ன மாக்கப்படுகிற நிலையில் அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் ஆவணப்படுத்துதல் செய்வதும் அவசியம் என கருதி யாழ் ஊடக மையத்தினால் உருவாக்கம் பெற்ற “இருளில் இதயபூமி” ஆவணப்படம் நடைபெறும் 34 வது ஐநா மனிதவுரிமை கூட்டத்தொடரில் பக்கவறை நிகழ்வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் ஏற்பாட்டில் பல்லின மக்களுக்கும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் இன்றும் முகம்கொடுக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பாக தாயகத்தில் இருந்து வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த சட்டத்தரணி க்ரிஷ் கவுண்டர், தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு கௌதமன் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக திரு திருச்சோதி அவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

ஆவணப்படுத்தப்பட்ட படத்தில் காட்டப்பட்டிருக்கும் விபரங்கள் அனைத்தையும் சர்வதேச பிரமுகர்களுக்கு காட்டும் வகையில் எமது இனம் இன்றும் சந்தித்து வரும் நிலஅபகரிப்பு தொடர்பான தகவலை ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்ல இலகுவாக அமைந்தது.

சட்டவிரோத குடியேற்றங்கள், நில அபகரிப்பு , தமிழர் பிரதேசத்தில் மரங்கள் அழிக்கப்படுத்தல் ,வனபிரதேசங்கள் பல விதத்திலும் சின்னாபின்னம் ஆக்கப்படுத்தல், தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகள் இந்து ஆலயங்களின் காணிகளுக்குள்ளும் அதனை அண்மித்த இடங்களிலும் திட்டமிட்ட வகையில் கட்டுதல் என பல்வேறு வடிவத்தில் தமிழர்களின் நிலம் இராணுவ ஆக்கிரமிப்புக்களாலும் சிங்களக் குடியேற்றங்களாலும் தமிழர் கலாசார மரபுரிமை அழிக்கப்படுதலை துல்லியமாக எடுத்துரைக்கும் முகமாகவே “இருளில் இதயபூமி” ஆவணப்படம் அமைந்திருந்தது.

“இருளில் இதயபூமி” ஆவணப்படம் ஏற்கனவே பிரான்ஸ் பாராளுமன்றத்திலும் பிரென்ஸ் மொழியில் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.