கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற வகையில் செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
19 ஆவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு மத்திய, மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வட மாகாண சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நிரப்புவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பில் பிரதமரையும் பட்டதாரிகள் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளனர்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது நிலைமைகள் தொடர்பில் கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனவும், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் இதுவரையில் தமது பிரச்சினைகள் தொடர்பில் எதுவித அழுத்தங்களையும் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கவில்லையெனவும் பட்டதாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.