வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது.
வவுனியாவிலுள்ள சீட் நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது.
இதற்கமைய, விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்தி, அவர்கள் சாதாரண மக்;களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்பட வைப்பதை இலக்காக கொண்டு குறித்த பாடசாலை செயற்பட்டு வருகிறது.
இதன் ஒரு விஷேட நிகழ்வாக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு முதல் நிகழ்வாக ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட வீதி ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
குறித்த ஓட்டப்போட்டி, வவுனியா தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் ஆரம்பமாகி வவுனியா பசார் வீதிவழியாக வைத்தியசாலை வீதி சென்று மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினை சென்றடைந்தது. இதில் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விஷேட தேவைக்குட்பட்டோரின் உள்ளக விளையாட்டு இம்மாதம் 28ஆம் திகதியும், இறுதி நிகழ்வாக மார்ச் மாதம் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது