முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கியுள்ளனர்.
கேப்பாபுலவு பிலக்குயிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 21 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முல்லைத்தீவு கிளையினரும், முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, தண்ணீர்ஊற்று, ஹிஜிராபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் பரிபாலன சபையினரும் நேற்று மாலை கேப்பாபுலவு மக்களின் போராட்ட இடத்திற்கு சென்று ஆதரவினை வெளியிட்டதோடு இரவு உணவினையும் அளித்துள்ளனர்.