அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் -கிழக்கு முதலமைச்சர்

270 0
உருவாக்கப்படவிருக்கின்ற புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 ஏறாவூரில்  நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற செயற்றிட்டங்களின் அமுலாக்கம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ‘தமிழ், முஸ்லிம் மக்களினதும் சமூகத் தலைமைகளினதும் உறவு, தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டு, எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தளும் உறுதியாக உள்ளார்கள்.
“அதற்கான முன்னெடுப்புக்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மனப்பூர்வமாக இணைந்தால், அதிகாரப் பகிர்வில், பெரும்பான்மை அரசாங்கத்திடமிருந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். “இரண்டு சிறுபான்மைச் சமூகங்களும் உடன்பாட்டோடு, ஒத்திசைவாகக் குரல் கொடுத்து, இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைந்து கொள்ள வேண்டும்.
“இரண்டு சமூகங்களுக்குமிடையில் அதிக விட்டுக் கொடுப்புக்கள் தேவைப்படுகின்ற அதேவேளை, இரு சமூகங்களினதும் கௌரவம் பாதிக்கப்படாத வகையில் பரஸ்பர புரிந்துணர்வும் உடன்பாடும் தேவை.
“இன்னமும் பிளவுபட்ட சமூகங்களாக நாம் இருப்பது, இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் ஆபாயம் இருப்பதால், இணக்கப்பாடு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது. “நீடித்து நிலைத்து நிற்கும் சமாதானமும் சகவாழ்வும் நமது இவ்விரு சமூகங்களினதும் தியாகங்களில் தங்கியுள்ளது’ என்றார்.