ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம்

354 0

வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும், ஈழத்தமிழரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த் தேசியத்திற்கான வரலாற்றுக் கடமையானது அடுத்த சந்ததியினர் கைகளுக்குச் சென்றுவிட்டதான வரலாற்று இயங்கியலை உவத்தல் காய்தலின்றி உய்த்துணருவதாக இப்பத்தி எழுத்தாளர் திடமாக நம்புவதால், ஈழத்தமிழரின் கடந்தகாலம் பற்றி ஒரு சுருக்கெழுத்துடன், கடந்த வரலாற்றின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டுப்பார்த்தலை இப்பத்தி முதற்கண்ணாகக் கொள்கின்றது.

வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையின் தெற்கு மற்றும் மத்தியப் பிரதேசங்களில் சிங்களவர்களும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குப் பிரதேசங்களில் தமிழர்களும் வாழ்ந்து, ஆட்சி புரிந்து வருகின்றனர். தமக்கேயுரிய இன, மொழி, மத பண்பாட்டு அடிப்படையில் தமிழர்கள் உயரிய நெறியுடன் தமது மண்ணில் அறவாழ்வு நடத்தி வந்தனர். ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புடன் தமிழரின் வாழ்விடத் தொடர்ச்சி கணக்கெடுக்கப்படாமல் அவர்களின் நிர்வாக வசதிக்கேற்றாற் போல ஆட்சிமுறைமை மாற்றமடைந்தது. சிங்கள தேசியம் அநாகரிகதர்மபால போன்றோரால் ஒரு அரசியற் சமூகமாகத் தன்னை வெற்றிகரமாகக் கட்டியமைக்கும் வரை, கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக் குடிகள் அவர்களின் நலன்களிற்காகத் தமிழரின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் அதிகார இலாபம் ஈட்டி வந்தனர். சிங்கள தேசிய வாதம் அரசியற்பரிமாணம் பெற ஆரம்பித்ததன் நேரடித்தாக்கத்தை இந்தக் கொழும்பு வாழ் மேட்டுக்குடிகள் உணர ஆரம்பிக்கும் வரை தமிழர் என்ற தனித்தன்மையான சொல்லை ஒரு சொல்லுக்கேனும் தமது சிந்தையில் நிறுத்தாமல், அதிகாரத்தில் பங்கு கேட்கும் அவர்களின் மேட்டுக்குடி ஆதிக்கப் போக்குத் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

சிங்கள தேசியத்தின் எழுச்சியால் தமது அதிகார அரசியல் ஆட்டம் காணுவதை உணர்ந்த கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக்குடிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான சேர். பொன்.அருணாசலம், அவர்களது வர்க்க நலனுக்காகவேனும் 1920 இல் தமிழர் தேசியவாத எழுச்சியைத் தோற்றுவித்தார். 1920 இல் அவர் காலமாக அந்தத் தேசியவாத எழுச்சியும் தேக்க நிலைக்கு வந்துவிட்டது.

1947 இல் ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டுப் போகும் நோக்கில் வடிவமைத்த சோல்பரி அரசியலமைப்பு சிங்கள மேலாதிக்கத்திற்கு எவ்வளவு மோசமாக அடித்தளமிடுகின்றது என்று கோடிட்டுக் காட்டி முழுமூச்சாக எதிர்த்து 50- 50 பிரதிநிதித்துவம் கேட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் பின் இளகுநிலை ஒத்துழைப்பு என்பதாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கையின் முதற்பிரதமராகப் பதவியேற்ற நாயக்கர் வம்சாவழியான டி.எஸ் சேனநாயக்காவுக்கு ஆதரவு வழங்கி அவரது அமைச்சரவையில் 1948 இல் அமைச்சுப் பதவியையும் பெற்று முழுத் தமிழர்களையும் முட்டாள்களாக்கினார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததும் முதற்கட்ட தமிழினக் குரோத நடவடிக்கையாக மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து தமிழர்களின் இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் டி.எஸ் சேனநாயக்காவின் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவழித்து ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத கறையை ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற கொழும்பு வாழ் மேட்டுக்குடி அரசியல்வாதி ஏற்படுத்தினார். இதனால் வெட்கமும் அவமானமும் சீற்றமுமுற்ற தமிழ் அரசியல்த் தலைமைகள் 1949 இல் பின்னாளில் தமிழரசுக் கட்சி என்று பெயர்மாற்றத்திற்குட்பட்ட சமஸ்டிக் கட்சியைத் தந்தை செல்வா தலைமையில் தொடங்கினார்கள்.

1952 இல் திருகோணமலையில் மாநாட்டைக் கூட்டிய தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசியல்த் தலைமைகள் தமிழர்களிற்கான சமஸ்டி அரசுமுறையையும் அதற்கான தமிழரின் தலைநகராகத் திருகோணமலையையும் அறிவித்துத் தீர்மானம் இயற்றியதுடன் தமிழ்த் தேசியம் தனது வாழிடத்தொடர்ச்சியை அரசியல் வடிவத்திற்குக் கொண்டு வந்து, தமிழ்த் தேசிய அரசியலிற்கு அதன் உண்மையான பரிமாணங்களுடன் அடித்தளமிட்டனர்.

1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் எஸ்.டபிள்யு .ஆர். டி. பண்டாரநாயக்கா என்ற நாயக்கர் வம்சாவழி வந்த சிங்களப் பிரதமரால் கொண்டு வரப்பட்ட அவலத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்களின் மீது சிங்களக் காடையர்களின் வன்முறையைச் சிங்கள அரசு ஏவியதோடு மட்டும் நிறுவிடாது, கல்லோயாக் குடியேற்றத் திட்டம் என்ற சிங்களமயமாக்கல் திட்டச் செயற்பரப்பில் இங்கினியாகலை என்ற இடத்தில் வாழ்ந்த 150 தமிழர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டதோடு, பதவியாவில் 400 தமிழ்க் குடும்பங்கள் உயிருடன் வெட்டித் துரத்தப்பட்டார்கள். இவ்வாறு மிகவும் கோரமாகத் தமிழின அழிப்பு சிஙகள அரசினால் அரங்கேற்றப்படுகையில், 1956 இல் பண்டா– செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.ஆர். ஜெயவர்த்தன கண்டி நோக்கி நடைப்பயணம் சென்று ஏற்கனவே கொதித்துப் போயிருந்த சிங்கள இனவெறிக்கு மேலும் சூடேற்றினார்.

புவியியல் அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் தமிழ் – சிங்கள ஆட்சியுரிமைப் பிரதேசங்களிற்கிடையிலான எல்லைகளாக அமைந்திருந்த பிரதேசங்களை அச்சாகக்கொண்டு தமிழர் நிலங்களை வல்வளைப்புச் செய்யவல்ல திட்டமான கல்லோயா  அபிவிருத்தித் திட்டத்தை டி.எஸ் சேனநாயக்கா ஆரம்பித்து வைக்க, அதனை அவர் பின் வந்த ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளரும் மெத்தக் கவனத்துடனும் மொத்த இனவெறியுடனும் எடுத்துச் சென்று தமிழ்ப் பாரம்பரிய இடங்கள் அழிக்கப்பட்டுச் சிங்களப் பிரதேசங்களுடன் இணைத்து, புதிதாக சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

1970 இல் சிங்கள இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து சிறிமா ஐக்கிய முன்னணி அரசு அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததைத் தொடர்ந்து, கல்வியில் தரப்படுத்தலை அறிமுகப்படுத்திக் கல்வியில் தமிழர்களின் மேலாண்மையைத் தகர்ப்பதற்கு முழுமுனைப்புடன் செயலாற்ற, இதனால் கொதித்துப் போன தமிழ் இளைஞர்கள் 1970 இல் தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து 1972 இல் முதலாம் குடியரசு அரசியலமைப்பை கொண்டு வந்து அதில் சோல்பரியில் குறிப்பிட்டிருந்த சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புத் தொடர்பான 29 ஆவது சரத்தையும் நீக்கி, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உவப்பான அரசியலமைப்பை உருவாக்கி சிலோன் என்ற பெயரை சிங்கள வெறியைத் தூண்டும் வகையிலான சிறிலங்கா என்ற பெயராக மாற்றம் செய்து தமிழர் தமக்கான தன்னாட்சித் தேசத்தை அமைக்க வேண்டிய தேவையை பெரும்பாலும் எல்லாத் தமிழர் மனங்களிலும் உணரச் செய்தார்.

தமிழினம் தனது சொந்த மண்ணில் தடயம் இல்லாமல் சிதைத்தழிக்கப்படப் போகும் பேரவலத்தை உணர்ந்த தமிழ்த் தலைமைகள், 1972 இல் திருகோணமலையில் மாநாட்டைக் கூட்டி தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஆதரவில் தமிழர் இளையோர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1974 இல் தனிநாயகம் அடிகளாரின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவெறி அரசு, அங்கு கூடியிருந்தோர் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கொலை வெறிக் குண்டாந்தடியடி நடத்தியது. இந்தக் கோர நிகழ்வுடன், ஆயுதந்தாங்கிய மறவழிப்போரே தமிழினத்தை சிங்களப் பேரினவாதக் கொலைவெறி அரசிலிருந்து காப்பாற்ற எஞ்சியிருக்கும் கடைசி வழி எனத் தமிழ் இளைஞர்களும் மனச்சாட்சியுள்ள மக்களும் உணரத் தலைப்பட்டனர். இதன் விளைவாக, தமிழ் இளையோர் பேரவையிலிருந்து ரெலோ என்ற ஆயுதப் போராட்ட இயக்கம் உருவானது. தொடர்ச்சியாக தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஆயுதந் தாங்கிய இயக்கத்தை மேதகு. பிரபாகரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். லண்டனில் கல்வியைத் தொடர்ந்த முற்போக்குப் புரட்சிகர இளைஞர் ஈழப் புரட்சிகர அமைப்பாளர் எனும் அமைப்பை உருவாக்கி தமது செயற்பாடுகளை 1975 களில் ஈழ மண்ணை நோக்கி நகர்த்தினர். 1976- வைகாசி ஐந்தாம் நாள் தமிழ்ப் புதிய புலிகள் என்ற அமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்தார் அதன் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள். இவ்வாறு தமிழரின் அறப் போராட்டங்கள் சிங்கள இனவெறியில் இருந்து தமிழரைக் காப்பாற்றாது என்று தூலாம்பரமாகி விடத் தமிழ் இளைஞர்கள் மறப்போரிற்கான செயற்றிட்டங்களில் இறங்கி விட்டார்கள். சிங்களத்தின் பிடிக்குள் சிக்கக்கூடாது என்ற திடத்துடன் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்த சிவகுமார் சயனைட் அருந்தி 1974 ஆடி 05 ஆம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976- வைகாசி– 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் அரசியற் தலைவர்கள் முன்வைத்தார்கள். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது செயலாக்க உறுதிமொழியாக வரிந்த தமிழ் இளைஞர்களின் மறவழி விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டைத் தளமாகப் பயன்படுத்தி, கிடைத்தவற்றைக் கொண்டு தம்மைக் கட்டியமைத்தார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட தனியரசுக் கோரிக்கைக்கான மக்களாதரவைக் காட்டுவதற்காகவே தாம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பங்கேற்பதாகக்  குறிப்பிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஈட்டி சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரான பின்பு, ஜே.ஆர் ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை 1981 இல் ஏற்றுக்கொண்டு தமிழீழத் தனியரசு நோக்கி முன்னேறிய ஈழத்தமிழர் அரசியலை பொறுப்புணர்வில்லாமல் பின்தள்ளி தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தினார்.

ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியும் என்றளவில் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பை ஏற்படுத்தி சகல அதிகாரமும் படைத்த சிங்கள அதிபராகப் பதவியேற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழின அழிப்பை சகல தளங்களிலும் ஆர்முடுக்கி விட்டார். 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறைவேற்றி, அப்பாவித் தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றி விசாரணையில்லாமல் சிறையிலடைத்தார். தொடர்ந்து 1981 இல் தமிழரின் அறிவியற் சொத்தாகவும் வரலாற்று ஆவணக் காப்பகமாகவும் திகழ்ந்த யாழ் நூல்நிலையத்தை அதில் இருந்த 95,000 கிடைத்தற்கரிய நூல்களுடனும் ஓலைச் சுவடிகளுடனும் சேர்த்து ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கியது. இவற்றால் கொதிப்படைந்த தமிழ் இளைஞர்கள் தமது மறவழிப் போரினை தீவிரப்படுத்தி சிங்கள அரச படைகளை எதிர்த்துப் போராடினர். இதன் தொடர்ச்சியாக 1983 இல் யாழ் திருநெல்வேலியில் வைத்துத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற புலிகளின் அதிரடித் தாக்குதலில் சிங்களப் ப்டையினர் 13 பேர் கொல்லப்பட்டதைக் காரணம் காட்டி 1983 ஆடி மாதம் தமிழர் மீது தீவளாவிய ரீதியில் இனவழிப்பு வன்முறை சிங்கள அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு ஏவிவிடப்பட்டது. இதில் 2000 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட, பல பெண்கள் பலாத்காரத்திற்குட்பட, குழந்தைகள் கொதிக்கும் எண்ணைய்த் தாச்சியில் போடப்பட, பல மில்லியன் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட, 1 இலட்சம் பேர் சொந்த நாட்டில் ஏதிலிகளாக, 40,000 பேர் கடல் கடந்து ஏதிலிகளாகினர்.

இதையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது சரத்துப்படி சிறிலங்காவின் ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஏற்று உறுதிமொழி வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரும் என்றாக, அதனை நிராகரித்து விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் இந்தியாவிற்குத் தஞ்சம் புகுந்தனர். ஆயுதந் தாங்கிய புரட்சிகர இயக்கங்களின் ஒன்றிணைந்த செயற்பாடு தமிழீழ மீட்சிக்குத் தேவையென்பதை உணர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற அமைப்பை 1985 இல் ஆயுதப் போராட்டத் தலைமைகள் உருவாக்கினர்.

துரித கதியில் நடந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க போராளிகள் மேற்கொண்ட பதில் நடவடிக்கைகளிற்கு அஞ்சி போராளி இயக்கங்களுடன் பேசுவதற்குச் சம்மதிக்க, இந்தியாவின் ஏற்பாட்டில் போராளி இயக்கங்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் இணைந்து சிங்கள அரசுடன் 1985 ஆடிமாதம் திம்புவில் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்க மறுத்த சிங்கள அரசு இப்பேச்சுவார்த்தையைப் பொருளற்றதாக்கியது.

1976 இலிருந்து லெபனானில் விடுதலைப் போராளிகள் பயிற்சி பெற ஆரம்பித்திருந்தாலும், பெருமளவான இளைஞர்களுக்கு 1986 வரையில் இந்தியா அதன் உளவு அமைப்பான றோ வின் கண்காணிப்பில் பயிற்சி வழங்கியது. இந்திய மேலாதிக்கக் கனவின் உச்சத்தில் நின்று தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் உளவு அமைப்பின் நரித்தனங்களின் நரபலி வேட்டையிலிருந்து தம்மைக் காக்கத் தவறிய விடுதலை அமைப்புக்கள் இந்தியாவின் நயவஞ்சக வலையில் வீழ்ந்து அதன் கூலிப்படையாகி ஈற்றில் தமிழின விரோத நடவடிக்கைகளில் இறங்கியமை தமிழரின் வாழ்வியல் வலியைப் பன்மடங்கு துயர் நிறைந்ததாக்கியது. இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்காக தமிழர் பகடைக்காயாக்கப்படுகின்றனர் என்ற தெளிவின் அடிப்படையில் நின்று இந்தியாவை எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்தியாவின் கூலிகளாகியும் மக்கள் விரோதிகளாயும் விதியின் வழியில் சோரம் போன அமைப்புக்களை தடை செய்து களத்தை விட்டு அகற்றியது.

தமிழீழ தாயகத்தில் தனித்து நின்று மக்களோடு மக்களாகப் போராடும் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் விடுதலை நடவடிக்கை (Operation Liberation) என்ற பெயரில் வடமாரட்சியை நோக்கி ஜே.ஆர். தலைமையிலான சிங்களப் படை 1987 ஆம் ஆண்டு வைகாசி மாதம் படையெடுத்தது. பட்டினி போட்டுப் பணிய வைக்க நினைத்த சிங்கள அரசுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பாடம் கற்பித்தனர். 1987 ஆனி மாதம் 4 ஆம் நாள் பூமாலை நடவடிக்கை என்ற பெயரில் இந்தியப்படை தமிழ் மக்களிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியது. கடைசியாக கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடிப் படைத்தளம் மீது 1987 ஆடி 05 ஆம் நாள் நடத்திய தாக்குதலுடன் கிலி கொண்ட ஜே.ஆர் தலைமையிலான சிங்கள அரசு இலங்கை– இந்திய ஒப்பந்தத்திற்கு சம்மதித்து அதன் மூலம் தமிழரின் தமிழீழக் கோரிக்கையைத் தவிடு பொடியாக்க களத்தில் இறங்கியது.

1987 ஆடி மாதம் 29 ஆம் நாள் இலங்கை– இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராஜீவ் காந்தியும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அடுத்த நாளே இந்திய வல்லாதிக்க அரசுப் படை இந்திய அமைதிப் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் காலடி எடுத்து வைத்தது. இந்நடவடிக்கைக்கு பவன் நடவடிக்கை எனப் பெயரும் சூட்டியிருந்தது. இந்தியாவின் வருகையால் ஏற்பட்ட ஆபத்தை நன்குணர்ந்த மேதகு பிரபாகரன் அவர்கள் 1987 ஆவனி மாதம் நான்காம் நாள் சுதுமலையில் மக்களைச் சந்தித்து வரலாற்றுப் புகழ்மிக்க சுதுமலைப் பிரகடனத்தை செய்தார். “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் தமிழீழம் மீட்கும் தனது போராட்ட இலட்சியத்தில் மாற்றம் இல்லை” எனத் தமிழ் மக்களிற்கு மேதகு பிரபாகரன் உறுதியளித்தார். ஒப்பந்தத்தை கணக்கெடுக்காமல் கடலில் பயணம் செய்த 12 வேங்கைகளை 1987 ஆவணி 13 ஆம் நாள் கடற்படை செய்ய அவர்கள் குப்பி கடித்து தாம் வரிந்த இலட்சியத்தின் படி வீர காவியமானார்கள். தொடர்ந்து இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழின விரோத நடவடிக்கைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்க, ஐந்தம்சக் கோரிக்கையை வைத்து யாழ். அரசியல் துறை பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் திலீபன் 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 ஆம் நாள் முதல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 265 மணி நேரம் உண்ணாநோன்பிருந்து “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலை வெளிப்பாட்டுடன் தியாகச் செம்மல் ஆனார்.

விடுதலைப் புலிகளைப் பணிய வைக்க முடியாது என்று புரிந்துகொண்ட இந்தியப் படை 1987 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகளிற்கெதிராகப் போரைப் பிரகடனம் செய்து தமிழரிற்கெதிரான போரினை நடத்தியது. ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் போன்ற ஊடகங்களை அடித்தொழித்து தனது தமிழர்கள் மீதான வன்கொடுமை பற்றிய செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்தியக் கொலை வெறிப் படை. மக்களுடன் மக்களாக நின்று தீரத்துடன் போராடிய விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப் பெரு நிலப்பரப்பை நோக்கி நகர்ந்தனர்.

1988 இல் தேர்தல் நடத்தி வரதராஜப் பெருமாலை முதலமைச்சராக்கிய இந்தியா, தனக்கு கூலிப்படையாக இருப்பதற்கு தமிழீழ இராணுவம் என்ற பெயரில் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி தமிழின விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முனைந்தது. ரணசிங்க பிரேமதாச சிங்கள அரச அதிபராக 1989 தை மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியப் படையை இலங்கையை விட்டு அகற்ற முனைப்புடன் செயற்பட்டார். இந்தியாவின் ஆட்சிக் கட்டிலில் ஏற்பட்ட மாற்றத்தாலும், உலகின் 4 ஆவது பலமான இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மயப்பட்ட போராட்டத்தினால் வாங்கிய அடியாலும் 1990 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் இந்தியப்படை தமிழினம் மீதான தனது கொலைவெறித் தாண்டவத்தை ஆடி விட்டு இலங்கைத்தீவை விட்டகன்றது. இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு பதிலடியாக வரலாறு 1991 வைகாசி 21 ராஜீவ்காந்தி சாவு என்ற செய்தியாக தமிழ் மண்ணில் வைத்துப் பதிந்தது.

இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்ய, தனது தார்மீகத் தளமான தமிழ்நாட்டை இழந்து தமிழ் மக்களின் மறவழிப்போர் எவரின் உதவியுமின்றித் தனித்து விடப்பட்டது. பின்னர், 1990 ஆடி 10 ஆம் நாள் முஸ்லிம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டமையால் புலிகளுக்கும் சிங்கள காவல்துறைக்கும் ஏற்பட்ட முறுகல் வடக்குக் கிழக்கு எங்கும் விரிவடைந்து இரண்டாம் கட்ட ஈழப்போராக வெடித்தது. தென் தமிழீழத்தில் 1990 களில் வகைதொகையின்றி தமிழர்கள் கொத்துக் கொத்தாக வெட்டப்பட்டும் சுடப்பட்டும் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டதுடன் அவர்களின் நிலங்களிலிருந்து பிடுங்கியெறியப்பட்டார்கள். விசேட அதிரடிப்படையுடன் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட ஊர்காவற்படையும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்து அவர்களது வாழ்விடங்களை அபகரிக்கும் வேலை தென் தமிழீழத்தில் தொடர்ந்தது. கல்முனை, திராய்க்கேனி, வீரமுனை, வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை, மயிலந்தனை, பள்ளியவாடி, வண்ணாத்தியாறு, புனாணை, புல்மோட்டை என தமிழினவழிப்புப் படுகொலைகள் சிங்கள அரச படுகொலைகளால் நிகழ்த்தப்பட்டது.

1994 ஆவணி 19 ஆம் நாள் ஆட்சிக்கட்டில் ஏறிய நாயக்கச் சூழ்ச்சியின் வாரிசான சந்திரிக்கா அம்மையார் தன்னைச் சமாதனப் புறாபோல் பாசாங்கு செய்து 1994 ஐப்பசியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி 6 மாதமாக எந்தவித முன்னேற்றமும் இன்று இழுத்தடித்து பாரிய போரிற்கான ஒழுங்குகளைச் செய்தார்.  “ரிவிரச” என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்க விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இளைஞர் யுவதிகளும் பெரும்பாலான மக்களும் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி நகர்ந்தனர்.  1996 ஆடி 18 ஆம் நாள் முல்லைத்தீவு இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்– 1 என்று பெயரிட்ட அதிரடி நடவடிக்கை மூலம் கைப்பற்ற, அதற்குப் பதிலடி தருவதாக நினைத்துக் கொண்டு சந்திரிக்காவின் சிங்களப் படைகள் சத்ஜெய என பெயரிட்ட இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் பரந்தனையும் கிளிநொச்சியின் சில பகுதிகளையும் கைப்பற்றியது. பின் வன்னியை வல்வளைப்புச் செய்ய ஜெயசிக்குறு என்ற பெயரிட்டு 1997 வைகாசி 13 ஆம் நாள் சிறிலங்காப் படைகள் தொடங்கிய இராணுவ நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் வீரஞ்செறிந்த முறியடிப்புத் தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புக்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 1998 மார்கழி 4 ஆம் நாளுடன் முடிவுக்கு வந்தது.

ஓயாத அலைகள்– 2 என்று பெயரிட்டு 40 மணி நேர உக்கிர தாக்குதல் மூலம் கிளிநொச்சியை மீட்ட விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்– 2 என்று பெயரிட்ட மண்மீட்பு நடவடிக்கையில் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, அம்பலகாமம், மாங்குளம் போன்ற இராணுவ முகாங்களைத் தாக்கி அழித்தனர். சிங்கள அரச படைகள் 2 1/2 வருடங்களாக சத்ஜெய, ஜெயசிக்குறு, ரணகோச என்று பெயரிட்டு நடத்திய கொலை வெறி இராணுவ நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட நிலங்களைச் சொற்ப நாட்களில் மீட்டெடுத்து, தமிழரின் மறத்தினை வன்னி மண்ணில் வைத்து உலகிற்குக் காட்டினார்கள் விடுதலைப் புலிகள். தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு வைகாசி 26 ஆம் நாள் ஆணையிறவுப் பெரும் இராணுவத்தளம் மீது போர் தொடுத்த புலிகள் 2000 ஆம் ஆண்டு ஆனி மாதம் 23 ஆம் நாளில் ஆணையிறவை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் போரியல் வேகத்தைக் கண்டு பீதியுற்ற வல்லாதிக்க உலகு, பேச்சுவார்த்தை என்று கூறி சூழ்ச்சியாலும் மிரட்டலாலும் தமிழரின் விடுதலைப் போரை முடக்கிவிடும் கணக்குடன் அமெரிக்காவின் இன்னொருமுகமான நோர்வே மூலம் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு 2000 ஆம் ஆண்டு கார்த்திகை  தமிழீழம் வந்தது. உலகிற்கு நல்லெண்ணத்தைக் காட்டும் இராசதந்திர முனைப்பாக விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தம் செய்தனர். எனினும் 12,000 சிங்கள இராணுவத்துடன் 2001 ஆவணி 25 ஆம் நாள் அக்கினிகோலா என்ற இராணுவ நடவடிக்கையை ஆணையிறவைக் கைப்பற்றும் நோக்குடன் தொடங்க, அந்த முயற்சி விடுதலைப் புலிகளின் வீரஞ்செறிந்த போரினால்த் தவிடுபொடியாக்கப்பட்டது. தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஆடி 24 ஆம் நாள் கட்டுநாயக்கா விமான நிலையத்தைத் தகர்த்த விடுதலைப் புலிகள் 500 கோடிப் பொருண்மிய அழிவை சிங்களத்திற்கு ஏற்படுத்தி சிங்களக் கொட்டத்தை முடக்கிப் போட்டனர். இதனால் கிலியுற்ற நரித்தனம் மிக்க மேற்குலக அடிமை மனோபாவமுள்ள ரணில் 2001 மார்கழி 05 ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிப் பிரதமராகிய பின்பு, நோர்வேயின் அனுசரணையில் 2002 மாடி 22 ஆம் நாள் விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

தொடர்ந்து 2002 சித்திரை 10 ஆம் நாள் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சந்திப்பைச் செய்த விடுதலைப் புலிகளின் தலைவர், அந்தச் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொள்கையுறுதியை உலகிற்குப் பறைசாற்றினார். அப்படியே, 2002 கார்த்திகையில் பாங்கொக்கில் பேச்சுவார்த்தை தொடங்க, அதைத் தொடர்ந்து ஒஸ்லோவில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் 7 கோடி அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயக நிலைப்பரப்பில் இறக்கி, தமிழரின் விடுதலைக் கனவை மழுங்கடிக்க உலகம் முனைந்தது.

2003 கார்த்திகையில் தன்னாட்சி அதிகார சபையை விடுதலைப் புலிகள் கோரி நிற்க, 2004 மாசிமாதம் 7 ஆம் நாள் தனது நிறைவேற்று சனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தார் சந்திரிக்கா அம்மையார். 2004 ஆம் ஆண்டு மார்கழி 26 இல் ஆழிப்பேரலை அவலத்தைத் தொடர்ந்து 2005 கார்த்திகையில் சிங்கள இனவெறிக்கும்பலாகி விட்ட ஜே.வி.பி உடனும் அதி தீவிர சிங்கள இனவெறிக் கட்சிகளுடனும் கூட்டு வைத்து சந்திரிக்கா மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி மகிந்த ராஜபக்சவை அரசுத் தலைவராக்கினார்.

இதைத் தொடர்ந்து 13 ஆவது திருத்தச் சட்டமும் 1987 இந்திய– இலங்கை ஒப்பந்தத்தின் படி இணைக்கப்பட்ட வடக்கு– கிழக்கு இணைப்பு செல்லுபடியாகாது என ஜே.வி.பி வழக்குத்தாக்கல் செய்து அதில் வெற்றி கண்டது. தமிழர் தாயகத்தில் பாரிய யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டு புலிகளுடன் பேசவென நோர்வேயின் உதவியை மகிந்த ராஜபக்ச நாடினார். 2006 மாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஜெனிவாவில் நடந்த இப்பேச்சுவார்த்தை மூடிய ஏ 9 பாதையை திறக்க மறுத்த மகிந்தவால் வழமைபோல தோல்வியைத் தழுவ, தமிழர் தாயகத்தை முற்றாக வல்வளைத்து ஒரு இனவழிப்புப் போர் நடாத்த கங்கணம் கட்டிச் செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் இனவெறிச் சிங்கள அரச இயந்திரத்தையும் அதன் இராணுவத்தையும் தாங்கிப்பிடித்துப் போசாக்கூட்டி உந்தித் தள்ளும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஸ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் இணைய தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். 2006 ஆவணி 28 இல் மாவிலாற்றில் போரை ஆரம்பித்த மகிந்தவின் சிங்கள அரச படைகள், வகை தொகையின்றி மக்களைக் கொன்றவாறு உலக நாடுகளின் ஆதரவுடன் தமிழர் தாயகத்தை வன்கவர்ந்து தமிழின அழிப்பு என்ற விடயத்தில் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்தது.

மகிந்த அரச தலைவராகிய பின்னர் திருகோணமலைப் படுகொலைகள், அல்லைப்பிட்டி, பேசாலை தேவாலயம், மூதூர், செஞ்சோலை, வாகரை, தாண்டிக்குளம், இலுப்பைக்கடவை, முரசுமோட்டை, முல்லைத்தீவு, தருமபுரம் மருத்துவமனை, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், உடையார்கட்டு மருத்துவமனை, மூங்கிலாறு, மாத்தளன், புதுமாத்தளன், தேவிபுரம், வள்ளிபுனம், ஆனந்தபுரம், இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளியவளை போன்ற இடங்களில் சுட்டும் வான் குண்டுத்தாக்குதல்களாலும், எறிகணைகளாலும் பாரிய தொடர்ச்சியான படுகொலைகளை சிங்கள அரசு செய்து தமிழர்களை இனவழிப்புக்குள்ளாக்கி வந்தது.

தமிழீழத் தனியரசு என்ற கொள்கையில் சற்றேனும் பின்வாங்காமல், எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல், வரிகளில் வரித்து விட முடியாத தியாகங்களைச் செய்து வீரத்துடன் போராடி உலகையே வியக்க வைத்த தமிழர்களின் திகில் நிறைந்த மறவழிப்போர் 2009 வைகாசி 18 ஆம் நாளுடன் பேசாநிலைக்கு வந்த துன்பம் தமிழ்த் தேசிய ஆன்மாவைக் குரூரமாகக் காயப்படுத்தி விட, தமிழினம் நட்டாற்றில் அரசியல் ஏதிலிகளாக தவிக்கும் நிலை ஈழத்தமிழரின் வாழ்வியலாகிப் போய்விட்டது. கடந்த கால கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி மாதம் 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற உறுதியுடன் “ஈழத் தமிழரின் நிகழ்காலம்” என்ற தலைப்பிட்டு அடுத்த வாரப் பத்தியைத் தொடருவோமாக.

தம்பியன் தமிழீழம்

31-12-2016

நன்றி – kaakam.com