யாழில் பங்களா வீட்டு ராஜாக்கள்!

304 0

ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல.

அண்மைக்காலமாகத் தமிழரசுக்கட்சித் தலைவர்களது சொத்து சேர்ப்பு வேகம் சாதாரண மக்களிடையே அச்சத்துடன் பார்க்கப்படுகின்றது. அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பங்களா கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டுவருகின்றார்.

ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள பங்களாக்களிற்கு மேலாக தற்போது மாவிட்டபுரத்தில் தனது கனவு இல்லத்தினை மாவை வேக வேகமாக கட்டிவருகின்றார்.

இது பற்றி மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர் ஒருவர் பிரஸ்தாபித்த வேளை இது நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு அனுமதி பெற்றுக்கொடுத்த தரகுப்பணமா? அல்லது மைத்திரியைக் கதிரையேற்ற பெற்றுக்கொண்டதா? என்பதை மாவையிடமே கேட்டு தெளிவுபடுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே வறுமையின் சின்னமாக காட்டிக்கொள்ளும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நல்லூரில் தனது இரண்டாவது பங்களாவை தற்போது வாங்கியுள்ளார். ஏற்கனவே நல்லூர் செட்டித்தெருவில் பங்களாவொன்றை சுமார் ஒரு கோடி செலவில் கடந்த நாடாளுமன்ற பதவி காலத்தில் அவர் கொள்வனவு செய்திருந்தார். தற்போது புதிய பதவிகாலத்தில் மேலுமொரு பங்களாவை அதே நல்லூர் ஆலய சூழலில் வாங்கியுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே யாழ்.நகரில் பல பங்களாக்களை பிடித்து வைத்திருந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஈ. சரவணபவன் அவற்றினை தற்போது தனது சொத்துக்களாக மாற்றிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே நல்லாட்சி அரசுடன் நல்லிணக்கம் காட்டி மௌனம் சாதித்து வருவதுடன் அவர்கள் அரசின் குரல் தரும் அதிகாரிகளாக மாறியுள்ளதாலேயே பங்களாக்களை வாங்கித்தள்ள முடிவாக சக பங்காளி அரசியல் கட்சி பிரதிநிதிகள் விமர்ச்சித்துக்கொள்கின்றனர்.