வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?

289 0

Ranil-Maithriசிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பத்து ஆண்டுகளாக சிறிலங்காவை ஆட்சி செய்து வந்த மகிந்த ராஜபக்சவினதும் அவரது கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும், இந்த நாடானது ஜனவரி 09, 2015 அன்று விடுபட்டுக் கொண்டது. உயர் கண்காணிப்பு, தலையீடு, ஊடக அடக்குமுறை, ஜனநாயக நிறுவகங்களை தளர்வடையச் செய்தல் போன்ற பல்வேறு அடக்குமுறைகளை ராஜபக்ச அரசாங்கம் கைக்கொண்டது.

இந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் பாரபட்சங்கள் போன்றன இதன் அபிவிருத்தி முயற்சிகளில் மேலோங்கியிருந்தது. ராஜபக்ச தன்னால் ஈட்டப்பட்ட போர் வெற்றியை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் போர் வெற்றியைப் பயன்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை ராஜபக்ச பெற்றிருந்தார்.

ஆகவே இந்நிலையில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதியதொரு அரசியல் தலைமைத்துவத்திற்கான தேவை எழுந்தது. இதன்மூலமே தற்போது ஆட்சியிலுள்ள தேசிய அரசாங்கமானது நாட்டின் ஆட்சியைப் பெற்றுக் கொண்டது. அதாவது ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துதல், நல்லாட்சியை மேலோங்கச் செய்தல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியவாறு தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

கிராம மட்ட சிங்கள மக்கள் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். ஆனால் அதேவேளையில் வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் சில அனைத்துலக நாடுகளும் சிறிசேனவிற்கு தமது முழு ஆதரவையும் வழங்கினர். இவர்களின் ஆதரவுடன் ராஜபக்சவை சிறிசேன தேர்தலில் வெற்றி கொண்டார்.

இவரது சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இதன் எதிர்க்கட்சியான திரு.விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து இந்த நாட்டின் முதலாவது தேசிய அரசாங்கத்தை உருவாக்கினர். இது சிறிலங்கா அரசியலில் பாரியதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இது மக்களுக்கும் நம்பிக்கை அளித்தது.

பிரதமர் விக்கிரமசிங்கவீனால் மத்திய வங்கி ஆளுநராக பாரிய கடன் பத்திர ஊழலில் ஈடுபட்ட ஒருவர் நியமிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உண்டுபண்ணிய போதிலும் தேசிய அரசாங்கமானது தனது முதலாவது ஆண்டு ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை ஓரளவு காப்பாற்றிக் கொண்டது. ஆகஸ்ட் 2015ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய அரசாங்கம் வெற்றி பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த அரசாங்கமானது மக்களின் நம்பிக்கையைத் தனதாக்கியது.

நிறைவேற்று அதிபர் கொண்டுள்ள அதிகாரங்களைப் பரவலாக்குதல், ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு வழிவகுத்தல், நல்லிணக்கத்திற்கான முழுமையான மூலோபாயம் ஒன்றை உருவாக்குதல் போன்ற பல்வேறு மாற்றங்களைக் கொண்ட அரசியல் சீர்திருத்தம் ஒன்றை தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

 

நான்கு முனைகளைக் கொண்ட அணுகுமுறையை உருவாக்குவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் தேசிய அரசாங்கம் உறுதி வழங்கியது. அத்துடன் புதிய அரசியல் யாப்பை வரையும் பணியையும் இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

பல தடவைகள் வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அதிபர் சிறிசேன, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி நிலங்களை விடுவித்து அவற்றை நில உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய கடப்பாட்டைத் தான் கொண்டுள்ளதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கமானது தனது இரண்டாம் ஆண்டு ஆட்சியின் போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நாட்டு பொருளாதாரமானது நலிவுற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் இடம்பெறும் கூர்மையான அரசியற் பேதங்கள் வெளிப்படையாகக் காண்பிக்கப்படுகின்றன. நாட்டின் தற்போதைய அதிபர் மற்றும் பிரதமர் ஆகிய இரு தலைவர்களிடமிருந்தும் வெளிப்படுத்தப்படும் முரணான கருத்துக்கள் அவர்களது ஒற்றுமையின்மையைச் சுட்டிநிற்கிறது.

முன்னாள் ஆட்சியாளரான ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் ஊழல் மற்றும் கொலை வழக்குகள் தொடர்பில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது இரகசியமான பின்கதவுச் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுவதும் தற்போது அதிகரித்துள்ளது.

விரோதத்தைத் தூண்டும் பேச்சுக்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் தொடர்பில் தேசிய அரசாங்கமானது அமைதி காப்பதானது இந்த அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஏமாற்றமளித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் பணியாற்றும் தமிழ் அரச அதிகாரி ஒருவரை பௌத்த பிக்கு ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை அச்சுறுத்தலையும் விடுத்த போதும் இவருக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

அரசியற் செல்வாக்கைக் கொண்ட இந்த பௌத்த பிக்கு தொடர்ந்தும் ராஜபக்ச காலத்திலிருந்து இவ்வாறான மீறல்களில் ஈடுபட்ட போதிலும் இவருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அனைத்துலக பங்குதாரர்களுக்கு குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் நாடுகளைப் பொறுத்தளவில் இந்த ஆட்சி மாற்றமானது முற்றிலும் பொருளாதார அல்லது பாதுகாப்பு சார் கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கியுள்ளன.

சிறிலங்காவின் முன்னைய ஆட்சியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்திருத்திருந்ததால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுநிலையானது பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இவ்விரு நாடுகளினதும் உள்நாட்டு மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் மீதான நலன்கள் பாதிப்படைந்திருந்தன.

Maithri-Ranil-Chandrika

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது அரசியல் ஸ்திரமற்றதாகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் காணப்படுகின்ற போதிலும், இந்த அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய கணிசமானளவு வாய்ப்பைக் கொண்டுள்ளது.

அரசியற் தீர்வுக்கான காலநிலை ஒருபோதும் உகந்ததாகக் காணப்படவில்லை. சிறிலங்காவில் இரண்டு பிரதான கட்சிகள்  முரண்பாடான நிலையைக் கடைப்பிடித்தமை மட்டுமல்லாது, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சியானது சிறிலங்காவின் முன்னைய அரசாங்கங்களில் அங்கம் பெறாது அவற்றைப் புறக்கணித்து வந்துள்ளமையுமே சிறிலங்காவில் அரசியற் தீர்வுக்கான வாய்ப்பான காலநிலை ஒன்று உருவாகாதமைக்கான காரணமாகும்.

ஆனால் தற்போது எதிர்க்கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. அத்துடன் தற்போதைய தேசிய அரசாங்கத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கும் இது ஆதரவளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டிய தேவையை உணர்ந்து செயற்படுகிறது.

அனைத்துலக சமூகத்தாலும் மனித உரிமைகள் அமைப்புக்களால் சிறிலங்கா மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும் என தீவிரமாக அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும் சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அழுத்தம் கணிசமானளவில் குறைவடைந்துள்ளது.

பொறுப்புக்கூறல் தொடர்பான அரசியற் சீர்திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளித்துள்ளது. இது தொடர்பில் கேள்வியெழுப்புவதால் பாரியதொரு அரசியல் ஆபத்து ஏற்படும் என்பதை கூட்டமைப்பு அடையாளங் கண்டுகொண்டமையே இதற்கான காரணமாகும்.

இதுவே சிறிலங்காவானது ஒருபோதும் அரசியற் தீர்வொன்றை எட்டமுடியாமற் போனமைக்கு வழிவகுத்தது.

எதுஎவ்வாறெனினும், தேசிய அரசாங்கமானது ஆட்சிக்கு வரும்போது ஆட்சியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. இவ்வாறான குறைபாடுகளுடன் ஆட்சியை நடாத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

சிறிலங்காவின் 225 நாடாளுமன்ற ஆசனங்களில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது 155 ஆசனங்களைக் கொண்டுள்ளது. திரு.சிறிசேனவிற்கு 50 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். இவர்களில் சிலர் ராஜபக்ச தரப்பிற்கு மாறவுள்ளதாக அச்சுறுத்தி வருகின்றனர். ஏனைய சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சவிற்கு ஆதரவாக உள்ளனர். ஆகவே அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சிறிசேன தனது சக்தி முழுவதையும் ஒன்றுதிரட்டி தனது கட்சியை ஒன்றாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

குறிப்பாக ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினர் புதிய அரசியற் கட்சியை நோக்கி நகரும் நிலையில் சிறிசேன தனது கட்சி உறுப்பினர்களை தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய நிலையிலுள்ளார்.

2017ல் ஆட்சியைக் கவிழ்க்கவுள்ளதாக திரு.ராஜபக்ச மிக அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். ஆனால் இவரது கருத்துக்களை நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் முற்றிலும் நிராகரித்துள்ளனர். கால முதிர்விற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு அரசியல் யாப்பு இடமளிக்கவில்லை எனவும் அத்துடன் ராஜபக்ச தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான சாதகமான அரசியற் சூழ்நிலையும் தற்போது காணப்படவில்லை எனவும் நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த அரசாங்கம் தோல்வியடைகின்ற போதெல்லாம், திரு.ராஜபக்ச தன்னை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்தும் இதேவேளையில், தற்போதைய அரசாங்கத்தின் பிரதான ஆளுங்கட்சியாகத் திகழும் ஐக்கிய தேசியக் கட்சியானது தனது பின்னிருக்கை உறுப்பினர்களின் அழுத்தத்திற்கு முகங்கொடுக்கின்றது.

ஸ்திரமானதொரு அரசாங்கம் அரசியற் தீர்விற்கு ஆதரவளிக்காதவிடத்து அதனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை அரசியற் தலைவர் ஒருவர் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களைக் கொண்டு அறியமுடியும். அரசியற் தீர்வு பெறாதவிடத்து பாரிய மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதாரத் திட்டங்களும் முறிவடைந்து விடும் என்பதை அரசியற் தலைவர் ஒருவர் நன்கறிந்திருப்பார்.

அரசியல் யாப்பு வரைவு தொடர்பாக ஆறு பேரைக் கொண்ட உபகுழுவின் அறிக்கையானது நாடாளுமன்றின் விவாதத்திற்காகக் காத்திருக்கும் போது, அரசாங்கத்தின் முன்னுரிமைகள் வேறு விடயங்களை நோக்கியதாக உள்ளமை தெளிவாகிறது. 2016ன் இறுதிப் பகுதியில் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கை பின்தள்ளப்பட்டு, அரசாங்கமானது உடனடி அரசியல் நிர்ப்பந்தங்களை நோக்கிச் செயலாற்றுவதை முன்னுரிமைப்படுத்தியுள்ளது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் விவாதங்கள் இடம்பெறவில்லை. அரசாங்கமானது அரசியற் சீர்திருத்தங்கள் தொடர்பாக தனது  பெரும்பான்மை சிங்கள மக்களுடன் கலந்துரையாடாவிட்டால், புதிய அரசியல் சீர்திருத்தமானது ஏனைய அரசியல் அழுத்தங்களை எதிர்ப்பதில் சவால்களை எதிர்நோக்கலாம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் கருத்துக்கணிப்பானது ஆபத்தானதாக அமையலாம். செய்ய வேண்டிய பணிகள் அதிகம் காணப்படுகின்ற நிலையில் இதற்கான காலஅவகாசம் குறைவாக உள்ளது.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவொன்றைக் கொண்டுள்ளனர். அதாவது இவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட முடியும். இவ்வாறானதொரு புதிய அத்தியாயத்தின் மூலம் சிறிலங்காவில் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அல்லது இவ்வாறானதொரு அரிய வாய்ப்பை விரயமாக்கிய தலைவர்களாகவே இவர்களை இந்த நாடு நோக்கும்.

சிறிலங்காவில் கொடிய யுத்தம் முடிவிற்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தற்போதும் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதில் பல்வேறு இடர்களை எதிர்கொள்கின்றனர்.

இவர்களது காத்திருப்பானது நீண்டதாகவும் வலி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நாட்டின் இரு தலைவர்களும் இது தொடர்பில் தீர்மானம் எட்டவேண்டும். இந்த வாய்ப்பை நாட்டின் இரு தலைவர்களும் கைவிட்டால் ஒருபோதும் அரசியற் தீர்வை எட்டமுடியாது.

ஆங்கிலத்தில் – Meera Srinivasan
வழிமூலம்       – The Hindu
மொழியாக்கம் – நித்தியபாரதி