வடக்கும் கிழக்கும் இணைவது உறுதி – சுமந்திரன்

347 0

dayasவடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிமன்றத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இதனை கூறினார்.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும்.

அந்த ஒப்பந்தத்தில் கூட, மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய சபைகள் ஒன்று சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட முடியும் என்பதற்காகத் தான்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும் தெட்டத் தெளிவாக கூறப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் காரணமாகத் தான், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலும் மாகாணசபை சட்டத்திலும், அதற்கான ஏற்பாடுகள் இருந்தன.

தற்காலிகமாக இணைக்கப்பட்டும் இருந்தது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

2010ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்வைத்து வருகின்ற எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக சொல்லுவதுடன், அந்த இணைப்பு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்மந்ததுடன் இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.