எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

616 0

thileeban-720x480பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்
திலீபனிற்கு
தீபம் ஏற்றுவோரே
பார்த்தீபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்…
எங்கள்
பார்த்தீபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்
சிறுகச் சிறுகச் சேர்த்து
நிமிரக் கட்டிய மனையும்
உயிரைப் பிரியும் பொழுதில்
தந்தை
உயிலாய்த் தந்த வளவும்
இன்பம்
பெருகப் பெருக நாங்கள்
ஓடித்திரிந்த தெருவும்
உள்ளம்
உருக உருகக் கண்ணீர்
விட்டுப்பிரிந்த ஊரும்
திரும்பக் கிடைக்கும்
காலம் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்
நாளும் பொழுதும்
கண்ணைக் கரைத்து
நாளை வருவார்
நாளை வருவார்
என்றே தங்கள்
இதயம் வதைத்து
கொலைஞர் பிடித்த
உறவை நினைத்துக்
கதறும் மனங்கள்
இருக்கும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்
சதியும் வெறியும்
ஒன்றாய்க் கலந்து
கருணை கனிமை
எதுவும் மறந்து
எங்கோ பிறந்து
மனிதம் துறந்து
எங்கள் மண்ணில்
மரணம் விதைத்து
துயரச் சுமையுள்
எம்மைத் திணிக்கும்
கொடுமைப் படைகள்
எரியும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்
உயிரை உடலை
உறவைத் துறந்து
உணர்வு முழுதும்
தமிழைக் கலந்து
விடியும் காலைக்
கதிராய் விரிந்து
தமிழர் தேசக்
கனவை வரித்து
மண்ணின் மானம்
பெரிதாய் மதித்து
மண்ணுள் உறங்கும்
மாந்தர் கேட்கும்
விடுதலை வந்து
சேரும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்
ஆகவே…
பசித்த வயிற்றோடு
பாடையேறிய
எங்கள்
பார்த்தீபன் கனவுகள்
மேடையேறி முழங்கவல்ல
தீபமேற்றி வணங்கவல்ல,
களத்திலேறிப் பகைமுடிக்க
நெருப்பிலேறிக்
கொடிபிடிக்க
தீர்வெடுங்கள்
திலீபனிற்குத் தேவையான
உணவை
உங்களால்தான்
சமைக்க முடியும்.

போராளிக் கவிஞன்:- லெப். கேணல் செந்தோழன்