பிரகீத் வரைந்த கேலிச்சித்திரமே அவரைக் கடத்தக் காரணமாக அமைந்தது!

331 0

Prageeth-Ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட வரைந்த ஒரு கேலிச்சித்திரமே அவரைக் கடத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் இதனைத் தெரிவிப்பதாகவும் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உபசேன மற்றும் லான்ஸ் கோப்ரல் ரூபசேன ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மீதான விசாரணையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காரணமின்றித் தாம் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, இவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று பிரதம நீதியரசர் சிறீபவன் தலைமையிலான மூற்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் கருத்துத் தெரிவிக்கும்போது,ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எந்தவொரு தடயத்தையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னரே இது தொடர்பான தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது.

நாட்டிற்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய புலனாய்வுப் பிரிவினராலேயே இந்தக் கடத்தல் மேற்கொள்ளப்பட்டது.முரளி சுவேந்திரன், என்பவர் விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார். போர் முடிந்த பின்னர், சரணடைந்த அவரிடம் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் இருந்தது. அதில் நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி இலக்கங்கள் இருந்தன.

எக்னெலிகொடவுக்கு கபரணவில் ஒரு காணி இருந்தது. முரளி என்பவர் நாதன் எனப்படும் இன்னொரு நபருடன் எக்னெலிகொடவை கபரணவில் இருந்த காணியில் முச்சக்கரவண்டியில் சென்று சந்தித்தார். அம்முச்சக்கர வண்டியை மனுதாரரே ஓட்டிச் சென்றார்.

அச்சந்தர்ப்பத்தில் அரசியல் தொடர்பான கடும் விவாதங்கள் இடம்பெற்றன. அந்த நேரம் எக்னெலிகொட அரசியல்வாதிகள் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்கு சென்ற இரண்டு விருந்தினர்களாலும் தான் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தனது சகோதரன் நாதன் என்பவர் கொழும்பு வருவதாகவும், அவருக்கு உதவி செய்யுமாறும் முரளி என்பவர் என்னெலிகொடவிடம் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் இந்த இரண்டு நபர்களும், ராஜகிரியவில் உள்ள எக்னெலிகொடவின் பணியகத்துக்குச் சென்றனர். அவருடன் உரையாடிய பின்னர், அங்கிருந்து வெளியேறினர்.

இதன்பின்னர், அவர்கள் இருவரும் வெளியே வந்தபின்னர் இன்னொரு குழு வெளியே காத்திருந்தது. அவர்கள் எக்னெலிகொடவின் கண்களை கட்டி வாகனத்தில் ஏற்றினர். அவர் கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல முக்கிய பிரமுகர்களின் ஒளிப்படங்கள் எக்னெலிகொடவுக்கு காண்பிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது, பிரகீத் எக்னெலிகொட சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பொறுப்பாக இருந்தார். பிரகீத் வரைந்த கேலிச்சித்திரம் ஒன்றே அவர் கடத்தப்படுவதற்கு காரணமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.